ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!!
வடக்கு மாகாணத்தில் கிராமிய வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ் ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகள் இன்று (11.02.2026) காலை அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் முறையாக ஆரம்பிக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகம் அவர்கள் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அவர்களும் கலந்து கொண்டார்
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா, வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ், யாழ். மாவட்டச் செயலர் ம. பிரதீபன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் குரூஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.
சுமார் 680 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் (வரி நீங்கலாக) 6.03 கிலோமீட்டர் நீளமுடைய இவ்வீதி முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது. பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு 2027 மே 12ஆம் தேதி மக்கள் பாவனைக்காக மீளக் கையளிக்கப்படும்.


