அரசியல் களத்திலிருந்து விடைபெறுகிறாரா மைத்திரி?
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேரடி மற்றும் செயற்பாட்டு அரசியலில் இருந்து தாம் ஒதுங்கியிருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
“தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதும் இல்லை. இருப்பினும், எவரேனும் நாட்டுக்கு நன்மை செய்யும் செயல்களை முன்னெடுத்தால், அது தொடர்பான நிகழ்வுகளில் மட்டும் ஒரு பிரஜையாகப் பங்கேற்று வருகின்றேன்.”
2022 ‘அரகலய’ (மக்கள் போராட்டம்) போராட்டத்திற்குப் பிறகு, மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவைச் சந்தித்தார். கடந்த பொதுத்தேர்தலில் அவரது மகன் தஹாம் சிறிசேன களம் இறங்கிய போதிலும், அவரால் வெற்றி பெற முடியவில்லை. இது சிறிசேன குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான சட்டச் சிக்கல்கள் மற்றும் உட்கட்சி மோதல்களும் அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுபவை.
ஐந்து ஆண்டுகள் நாட்டின் தலைவராக இருந்த ஒருவர், தற்போது எந்தக் கட்சியும் இன்றி அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

