புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு இலங்கைத் திருச்சபை எதிர்ப்பு:
இலங்கையில் நடைமுறையிலுள்ள சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக, புதிய அரச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை (PSTB) அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவை இலங்கைத் திருச்சபை (Church of Ceylon) வன்மையாகக் கண்டித்துள்ளது.
இலங்கைத் திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்கத்தின் இந்த நகர்வு ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
அடக்குமுறைச் சட்டங்களை நீக்கி, மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்தார். ஆனால், இந்த புதிய PSTB சட்டமூலம் அந்தப் வாக்குறுதியை மீறும் வகையில் அமைந்துள்ளதாகத் திருச்சபை தெரிவித்துள்ளது.
கடந்த 47 ஆண்டுகளாக PTA சட்டம் எவ்வாறு ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மையினரை ஒடுக்கப் பயன்படுத்தப்பட்டதோ, அதே போன்ற அடக்குமுறைப் பண்புகளை இந்தப் புதிய சட்டமூலமும் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“பயங்கரவாதம்” என்பதற்கு இந்தப் புதிய சட்டமூலத்தில் வழங்கப்பட்டுள்ள தெளிவற்ற வரைவிலக்கணம், மாற்றுக் கருத்துக்களை நசுக்கவும் பேச்சுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் அதிகாரிகளால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனத் திருச்சபை எச்சரித்துள்ளது.
கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக முழுமையாக நீக்க வேண்டும், தற்போது முன்மொழியப்பட்டுள்ள அரச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை (PSTB) அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, அது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என திருச்சபை வலியுறுத்தியுள்ளது.


