முஸ்லிம் மக்களின் காணிகளுக்கு மாற்றுக் காணிகளை வழங்க அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அனுமதி..!

முஸ்லிம் மக்களின் காணிகளுக்கு மாற்றுக் காணிகளை வழங்க அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அனுமதி..!

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் பிரதி அமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் அம்பாறை கச்சேரியில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தீகவாபிய புண்ணிய பூமி பிரகடனத்தால் பொன்னன் வெளிக் கண்டத்தில் காணிகளை இழந்த முஸ்லிம் மக்களின் காணிகளுக்கு மாற்றுக்காணிகளை வழங்கும் முன்மொழிவினை அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு சென்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அனுமதியினை வழங்குமாறு கோரி முன்மொழிவுகளை முன் வைத்திருந்தார்.

 

வழமையாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு விடயத்தை சமர்ப்பித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகாரத்திற்காக முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் சுற்று நிருபத்தினை மீறி 02வது தடவையாக பொன்னன் வெளியில் காணிகளை இழந்த முஸ்லிம் மக்களுக்கான பதில் காணிகளை வழங்கும் முன் மொழிவை மீண்டும் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பிக்குமாறு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் பணிப்புரை வழங்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நீண்ட காலமாக இடம்பெறவில்லை. இதனால் கமத்தொழில், கால் நடை வளங்கள் , காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் பொன்னன் வெளியில் காணிகளை இழந்த முஸ்லிம் விவசாயிகளுக்கு பதில் காணிகளை வழங்கும் விடயமான முன் மொழிவுகளை எழுத்து மூலம் முன்வைத்தேன்.

இது தொடர்பாக அமைச்சர் திரு.லால் காந்த அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு எழுத்து மூலம் அமைச்சின் செயலாளரினால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

1948ம் ஆண்டில் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராம சேவகர் பிரிவுகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வசித்து வந்த முஸ்லிம் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் 1980ம் ஆண்டு காணிக் கச்சேரி நடாத்தப்பட்டு 200 முஸ்லிம் விவசாயிகளுக்கு E.S.(LC – 75) அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து 1982 ம் ஆண்டில் குறித்த பகுதி தீகவாபியை புனித பூமி பகுதியாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முஸ்லிம் விவசாயிகளுக்கு பதிலாக சிங்கள மக்கள் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமிப்பு செய்து விவசாய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் .

எனினும் அக்காணிகளுக்கு முன்னர் முஸ்லிம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட E.S(L-75) அனுமதி பத்திரங்கள் இரத்து செய்யப்படாமலேயே பின்னர் சட்ட விரோதமாக காணிகளை ஆக்கிரமித்த 102 சிங்கள நபர்களுக்கு தலா 2.5 ஏக்கர் வீதம் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என பிரதேச செயலாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

 

அதன் பின்னர் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பொன்னன் வெளி காணியில் பயிர்ச்செய்கை மேற் கொண்டு காணிகளை இழந்த முஸ்லிம் மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்க வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில் அப்பிரதேசத்திலே இத்தகைய மாற்றுக் காணிகளை கண்டறிவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் மேலும் காணிகளை வழங்கும் போது உருவாகக்கூடிய இன,மத முரண்பாடு மற்றும் தொல் பொருள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இலக்கம் 7/LLRC23/1 மற்றும் 2015.01.02 அன்று குறிப்பிடப்பட்ட கடிதத்தின் மூலம் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

 

குறித்த காணி வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் 05/2001 இலாகா சுற்றறிக்கையின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும் அக் காணி வனப் பாதுகாப்புத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டால் பொன்னன் வெளி காணிகளை இழந்த முஸ்லிம்களுக்கு மாற்றுக்காணியாக வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார் என கமத்தொழில்,கால் நடை வளங்கள்,காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் திரு. டி.எம் . விக்ரமசிங்க அவர்கள் தனக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

 

அமைச்சின் செயலாளரின் எழுத்து மூல கடிதத்தின் பிரதியை அம்பாறை மாவட்ட செயலாளரிடம் கையளித்தார்.

 

பொன்னன் வெளியில் காணிகளை இழந்தவர்களுக்கான மாற்றுக்காணிகளை வழங்குவதற்கு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பரிந்துரையையும், அம்பாறை மாவட்ட வனப் பாதுகாப்பு பணிப்பாளரின் அனுமதியையும் வழங்குமாறும் இதன் பின் அமைச்சர் லால் காந்த அவர்களுடன் இணைந்து வனப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கான முன் மொழிவுகளை தான் முன் வைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

 

இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பரிந்துரையை வழங்குவதாகவும் அம்பாறை மாவட்ட வனப் பாதுகாப்புப் பணிப்பாளர் இக் காணி தொடர்பான சிபாரிசினை வனப்பாதுகாப்பு அமைச்சின் D.G க்கு வழங்குமாறு பிரதி அமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ தெரிவித்தார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் நீண்ட காலமாக பொன்னன் வெளி காணிகளை இழந்த முஸ்லிம் விவசாயிகள் தமக்கான காணிகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு , பதில் காணிகள் வழங்கப்படாத நிலைமையில் தங்களுக்கான காணிகளின் உத்தரவு பத்திரங்களை மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் மாற்றுக்காணி வழங்கப்படாத நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

பொன்னன் வெளியில் முஸ்லிம் மக்கள் காணிகளை இழந்தது உண்மையானது எனவும் காணி இழந்த முஸ்லிம் மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க வேண்டும் என்ற விடயம் யதார்த்த பூர்வமனாதாக இருக்கின்றது என காணி அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது குறித்து தான் திருப்தியடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin