யாழ். பல்கலைக்கழகத்தில் கனேடிய உயர்ஸ்தானிகர்: கல்வி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடல்!
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் அவர்கள், தனது வடக்கிற்கான உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27, 2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளாா்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் துறைசார் தலைவர்களுடன் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு, எதிர்காலக் கல்விசார் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
கனேடிய உயர்ஸ்தானிகர், துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை சந்தித்து பல்கலைக்கழகத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.
அத்துடன் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர் மற்றும் அரசறிவியல், பொருளியல், மொழிபெயர்ப்புக் கற்கைகள் ஆகிய துறைகளின் தலைவர்களைச் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இலங்கையின் சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலமைகள், கனேடியத் தூதரகத்தின் அனுசரணையுடன் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் தற்போதைய செயற்றிட்டங்கள், மாணவர்களுக்கான ஆய்வு மற்றும் கல்விப் பரிமாற்ற வாய்ப்புகள் என்பன குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கனடா மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான நீண்டகாலக் கல்வி உறவை இந்த பயணம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
Tag Words: #UniversityOfJaffna #CanadaInSL #IsabelleMartin #HigherEducation #JaffnaNews #AcademicCollaboration #Diplomacy #LKA #NorthernProvince


