புத்தளத்தில் மாயமான மீனவன் ஒருவர் சடலமாக மீட்பு!

புத்தளம் – கற்பிட்டி பத்தலங்குண்டு கடற் பிரதேசத்தில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர் ஒருவர் நேற்றைய தினம் (07-10-2022) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கற்பிட்டி, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த முஹம்மட் பஸ்லான் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த புதன்கிழமை (05-10-2022) குறித்த மீனவர் உட்பட ஐவர் கற்பிட்டி பத்தலங்குண்டு பகுதியில் உள்ள கடற்பிரதேசத்தில் கடலுக்குள் குதித்து சங்கு குளிப்பதற்காக கடலுக்குள் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு காணாமல் போன குறித்த மீனவரை தேடி கடற்படை மற்றும் பொலிஸார் ஆகியோரின் உதவியுடன் மீனவர்களும் பொதுமக்களும் கடந்த இரண்டு நாட்களாக தேடியுள்ளனர்.

இருப்பினும், குறித்த மீனவரின் சடலம் இன்று மன்னார் சிலாவத்துறை கடற்கரையோரப் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கரையொதுங்கிய மீனவரின் சடலம் விசாரணையின் பின்னர் புத்தளத்திற்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor