களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு..!

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31.12.2025) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கைதியின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த கைதிக்கு தற்போது அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வைத்தியசாலை வளாகத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவியதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin