உடுதும்பரையில் அதிக மழைவீழ்ச்சி:பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன..!
இன்று (19) காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், நாட்டின் அதிகப்படியான மழைவீழ்ச்சி உடுதும்பரை பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் உடுதும்பரை பகுதியில் 201 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இரண்டாவது அதிகப்படியான மழைவீழ்ச்சி உடுதும்பரை பொத்தபிட்டிய பகுதியில் 155 மில்லிமீற்றராகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, 34 பிரதான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருவதாக இன்று காலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தின் கலாவெவ, இராஜாங்கனை, நாச்சாதுவ மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்கள் இவ்வாறு வான்பாய்கின்றன.
கண்டி மாவட்டத்தின் பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே ஆகிய நீர்த்தேக்கங்களும், குருநாகல் மாவட்டத்தின் தெதுறு ஓயா மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சேனநாயக்க சமுத்திரம் ஆகியவையும் வான்பாய்ந்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் பின்வருமாறு திறக்கப்பட்டுள்ளன:
கலாவெவ: 2 வான் கதவுகள் தலா 6 அடி அளவில்.
இராஜாங்கனை: 4 வான் கதவுகள் தலா 5 அடி அளவில் மற்றும் 2 வான்கதவுகள் தலா 4 அடி அளவில்.
நாச்சாதுவ: 4 வான் கதவுகள் தலா 4 அடி அளவில் மற்றும் 3 வான்கதவுகள் தலா 2 அடி அளவில்.
அங்கமுவ: 2 வான் கதவுகள் தலா 2 அடி அளவில்.
மண் சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக பதுளை, மாத்தளை, கிளிநொச்சி, கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் வீதிகளில் சில இடங்கள் முழுமையாகத் தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பொலன்னறுவை சுங்கவில – சோமாவதிய வீதி வெள்ளம் காரணமாகத் தடைப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

