முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை: அமைச்சர் விளக்கம்
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு திட்டமிட்டு மறுக்கப்படவில்லை என்றும், குறித்த காலப்பகுதியில் அத்தகைய நீடிப்பின் அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறைசார் சேவைகள் தொடர்பில் சமூகத்தில் மதிப்பும், கௌரவமும் காணப்படுவதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ இதன்போது குறிப்பிட்டார்.
“இவரைப் போன்று பல அரச அதிகாரிகள் காணப்படுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் நீதிமன்றக் கட்டமைப்பிற்குள் சேவை நீடிப்புக்கள் வழங்கப்படும் போது பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்,” என அமைச்சர் தொடர்ந்தும் தெரிவித்தார்.
வழமையான நடைமுறையே காரணம்
நீதிமன்றக் கட்டமைப்பிற்குள் சேவை நீடிப்பு வழங்குவது, அடுத்தடுத்த நிலைகளுக்குப் பதவியுயர்வு பெற வேண்டியவர்களுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். அவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டே அவருக்குச் சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருந்திருக்கலாம் எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
மாறாக, இது திட்டமிட்டுச் சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருந்திருக்கவில்லை என்றும், இது வழமையான நடைமுறையே என்றும் அவர் வலியுறுத்தினார்.
பதவி வெற்றிடங்கள் மற்றும் நியமனங்கள்
சில துறைகளில் ஓய்வு பெறவிருந்த அதிகாரிகளுக்குச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதற்குக் காரணம், அங்கு பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களுக்குப் பொருத்தமானவர்கள் இல்லாமல் இருந்திருக்கலாம் என்பதாகும். எனவேதான் அத்துறைகளில் நீடிப்புகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், “எனவே முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனது சட்டத்துறைசார் சேவை மீது என்றும் எமக்கு மதிப்பும், கௌரவமும் காணப்படுகிறது,” எனத் தெரிவித்தார்.

