பாதாள உலக குழுத்தலைவன் “ஹரக் கட்டா” என்ற நதுன் சிந்தகாவின் மனைவி மகேஷிகா மதுவந்தி, தன்னை பற்றிய தவறான மற்றும் அவதூறான செய்தியை வெளியிட்ட பல ஊடகங்களுக்கு எதிராக ரூ. 500 மில்லியன் (ரூ. 50 கோடி) நஷ்ட ஈடு கோரி சட்ட அறிவிப்பு அனுப்பியுள்ளார்.
சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன ஊடாக அனுப்பப்பட்ட இந்த சட்ட அறிவிப்பில், மதுவந்தியும் அவரது குழந்தையும் “கேஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட பிரபல பாதாள உலக நபர்களுடன் மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக, ஊடகங்கள் சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செய்தி இணையத்தளங்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் செய்தி அறிக்கைகளில் வெளியான இந்த செய்தி, மதுவந்தி எந்த அடிப்படை ஆதாரமும் அல்லது சட்ட பிடியாணையும் இன்றி மலேசிய காவல்துறையின் காவலில் இருப்பதாக பொய்யாகக் கூறியதாக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் தனது குழந்தைவுடன் தனது இல்லத்தில் இருப்பதாகவும், எந்தவொரு சட்ட அமலாக்க நிறுவனத்தாலும் கைது செய்யப்படவோ அல்லது விசாரிக்கப்படவோ இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த செய்தி, மதுவந்திக்கும் அவரது குழந்தைக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது தனிப்பட்ட நற்பெயருக்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறான செய்தியை உடனடியாக திரும்பப் பெற்று, ஒரு திருத்தத்தை வெளியிட வேண்டும் என்று அவர் அந்த ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், நற்பெயருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு ரூ. 500 மில்லியன் இழப்பீடு கோரி சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அவர் தனது சட்ட ஆலோசகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

