பல மாற்றங்களுடன் இலங்கையின் 77ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம்!

பல மாற்றங்களுடன் இலங்கையின் 77ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம்!

இலங்கையின் 77ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள், நாளை (04) காலை, சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன. அதன்படி, நாளை பாதுகாப்புக்காக 1,000க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்த ஏற்பாடுகள் தொடர்பில், இன்று (03) நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இத்தகவல்களை வெளியிட்டார்.

நிகழ்வுக்கு வருபவர்கள் பரிசோதிக்கப்பட்டு பின்னர் சுதந்திர தின விழாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சுதந்திர தின விழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

நாளை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அனைவரும் காலை 7 மணிக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து தங்கள் இருக்கைகளில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சுதந்திரதின கொண்டாட்டங்களைக் காண வரும் பொதுமக்கள் பௌத்தாலோக மாவத்தை வழியாக வந்து, பின்னர் ரூபவாஹினி வளாகத்திற்கு அருகில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு, தங்கள் இருக்கைகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை குறைந்த செலவில், பொதுமக்களுக்கு குறைந்தபட்ச இடையூறுகளுடன், அதிக பொது மக்களின் பங்கேற்புடன் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ள முப்படைகளின் எண்ணிக்கை 40 வீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அணிவகுப்புக்கு முப்படை கவச வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin