மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 30,000 கோதுமை மா பொதிகள் மீட்பு
– பதுக்கி வைக்கப்பட்ட 8,000 சம்பா அரிசி மூடைகளும் கண்டுபிடிப்பு
– சீல் வைக்கப்பட்ட களஞ்சியசாலை
– நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய விசேட சோதனை
வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய விசேட சோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா அடங்கிய களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரசபையின் 1977 என்ற குறுந்தகவல் எண்ணுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில், இன்று (30) நடத்தப்பட்ட சோதனையின் போது சம்பந்தப்பட்ட களஞ்சியசாலையில் இருந்து 25 கிலோ எடையுள்ள 30,000 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த கோதுமை மாவு விலங்குகளின் தீவனத்திற்காக விநியோகிப்பதாக தெரிவித்த போதிலும், மீண்டும் சந்தைக்கு விநியோகம் செய்யப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரசபை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், குறித்த களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி 25 கிலோ மூடைகள் 8,000 காணப்பட்டுள்ளது.
இந்த அரிசி சில காலத்திற்கு முன்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பருவத்தில் அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தாலும், இந்த அரிசி அதற்கு முன்பே இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தையில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டபோதும், இந்த அரிசி போதுமான அளவில் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதன்படி, மேலதிக விசாரணைக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.