மஸ்கெலியா தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து செந்தில் தொண்டமான் விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் 10 ஆம் திகதி மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனின் எமது பதிலடி தீவிரமாக இருக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஸ்கெலியா பெருந்தோட்டத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களிலுள்ள தோட்ட தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் தோட்ட மக்களை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போதே செந்தில் தொண்டமான் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர்களின் உழைப்பு
அவர் மேலும் கூறுகையில், “எவ்வாறு தொழிற்சங்க பலத்தை காட்ட வேண்டும் என்பது தொடர்பில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான், காங்கிரஸில் உள்ள எங்கள் அனைவருக்கும் சிறப்பாக பயிற்றுவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் தேயிலை ஏற்றுமதி மூலம் சிறந்த வருமானம் கிடைக்கின்றது.

தற்போதைய சூழ்நிலையில் தொழிலாளர் ஒருவர் 4 கிலோ பச்சைக் கொழுந்து எடுத்தாலே அவர்களின் சம்பளம் ஈடாகி விடுகின்றது. அதற்கு மேல் பறிக்கப்படும் கொழுந்து மூலம் கம்பனிகளே இலாபம் அடைகின்றன.

அதாவது நாளொன்றுக்கு சுமார் ஆறாயிரம் ரூபா வரை உழைத்து கொடுத்து விட்டே தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா பெறுகின்றனர்.

தொழிலாளர்களுக்கு சம்பளம்

மஸ்கெலியா பெருந்தோட்டம், எதிர்வரும் 10 அல்லது 11 ஆம் திகதிக்குள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

மாறாக இழுத்தடிப்பு இடம்பெற்றால், பெருந்தோட்டத்தை அரசாங்கம் சுவீகரிக்க வேண்டும்.

அரச நிறுவனத்தால் பராமரிக்க முடியவில்லையெனில், தொழிலாளர்களுக்கு காணியை பகிர்ந்தளிக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor