சிரிப்பின் ரகசியம் என்ன?

தென்னிலங்கை அரசியலில் யார் எப்போது கட்சித் தாவுவார்கள் அல்லது யார் எப்போது நண்பர்களாகுவார்கள் அல்லது யார் எப்போது எதிரகளாகுவார்கள் என எவரும் கணிக்க முடியாது.

அத்தகைய அரசியல் நிகழ்வுகளே ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் இடம்பெற்று வருகிறது.

இலங்கைத் தேர்தல் சட்டம் என்பது கட்டுபாடுகளற்ற ஒரு சட்டமாகும். அதிகமாக கட்சித் தவால்கள் இடம்பெறும் ஒரு நாடாக இலங்கை உள்ளது. மோசமான அரசியல் கலாசாரம் இலங்கையில் தலைத்தூக்க இதுவே பிரதான காரணம்.

வலுவான தேர்தல் சட்டமொன்று இந்த நாட்டில் இல்லாமையால் நேர்மையான அரசியல்வாதிகளும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

நேரத்துக்கு நேரம் கட்சி தாவல்களை மேற்கொள்ள முடியாத சட்டமொன்று இருந்திருந்தால், மோசமான அரசியல் கலாசாரமொன்று நாட்டில் உதயமாகியிருக்காது.

கடந்த சில நாட்களாக ஐக்கிய மக்கள் சக்தியில் முக்கிய தலைவர்களாக கடந்த காலத்தில் செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்தில் இணைய உள்ளதாக பரவலான செய்திகள் வெளியாகி வருகின்றன.

என்றாலும், சம்பிக்க ரணவக்க அதனை முற்றாக நிராகரித்துள்ளார். ஆனால், ராஜித சேனாரட்ன மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் அந்த செய்திகள் குறித்து எவ்வித கருத்துகளையும் முன்வைக்கவில்லை.

ராஜித சேனாரட்ன நேரடியாக ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருப்பது அவரது கருத்துகள் ஊடாக தெரியவருகிறது.

விரைவில் அவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார் என்றே அரசதரப்பு தகவல்களும் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சரத் பொன்சேகாவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை விரைவில் வெளிப்படுத்துவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று கொழும்பில் சரத் பொன்சேகா எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரணில் விக்ரமசிங்கவும் சரத் பொன்சேகாவுக்காவும் சிரித்த முகத்துடன், மிகவும் நெருக்கம் காட்டினர்.

இந்த புகைப்படங்கள் தற்போது தென்னிலங்கை அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவை கடந்த காலத்தில் கடுமையாக விமர்சித்தவர்களில் சரத் பொன்சேகாவும் ஒருவர். ஆனால், இன்று அவரது நூல் வெளியீட்டு விழாவின் பிரதான அழைப்பாளர் ரணில் விக்ரமசிங்க.

கடந்த காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த சஜித் பிரேமதாச இன்று பொன்சேகாவுக்கு எதிரி. ஆகவே, தென்னிலங்கை அரசியலில் எதிரிகள் நண்பர்களாகுவதும், நண்பர்கள் எதிரிகளாவது சாதாரண விடயமாகிவிட்டது.

இத்தகைய செயல்பாடுகளுக்கு பிரதான காரணம் வலுவான தேர்தல் சட்டமொன்று நாட்டில் இல்லை என்பதே. விரைவில் சரத் பொன்சேகா ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்துவார் என்றே அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin