வேலைக்கு சென்ற பெண்ணை கடத்தியவர்களை சாதுர்யமாக மடக்கிப்பிடித்த பொலிசார்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பெண்ணொருவரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை பெண் ஒருவரை இரண்டு சந்தேகநபர்கள் காரில் கடத்திச் சென்ற நிலையில், அவர்கள் பத்தேகம பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போதே அப் பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பு கொடுத்த அதிகாரிகள்

சந்தேகநபர்கள் குறித்த பெண்ணை காரில் கடத்திக் கொண்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த நிலையில் , கட்டணம் செலுத்தும் போது கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களினால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குறித்த காரில் ஒரு நபர் பின் இருக்கையில் அமர்ந்திருந்து குறித்த பெண்ணை முகத்தை மூடிய நிலையில் வைத்திருப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.

அதன் பின்னர் அதிகாரிகள் பத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதை அடுத்து, பத்தேகம நகருக்கு அருகில் பொலிஸ் குழுவொன்று தயார் நிலையில் இருந்துள்ளனர்.

பொலிஸார் மடக்கிப்பிடிப்பு

இதன்போது, குறித்த வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியவுடன், பின் இருக்கையில் அமர்ந்திருந்த சந்தேக நபர் உடனடியாக வாகனத்தின் கதவுகளைப் பூட்டி, கூரிய ஆயுதத்தைக் காட்டி அந்தப் பெண்ணை மிரட்டுவதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த, ஒரு அதிகாரி வானத்தை நோக்கிச் சுட்டார், இதன் போது மற்ற அதிகாரிகள் காரின் பின் இருக்கை கண்ணாடிகளை உடைத்து வாகனத்தைத் திறந்தனர்.

இதில், வெட்டுக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணையும் சந்தேகநபரையும் வாகனத்தில் இருந்து அதிகாரிகள் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

கடத்தப்பட்ட பெண் மெருத்துவமனையில்

தொடர்ந்து காயங்களுக்குள்ளான குறித்த பெண் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வாகனம் பொலிஸ் காவலில் எக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தின் சாரதி 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor