பந்தயத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களுக்கு அபராதம்: அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

கொழும்பில் சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

பம்பலப்பிட்டி, காலிவீதி மற்றும் டுப்ளிகேஷன் வீதியில் பொழுதுபோக்கிற்காக கவனயீனமாகவும் அபாயகரமானதாகவும் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டில் 15 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

குறித்தப் பிரதேசத்தில் ஒருவழிப்பாதையில் சட்டவிரோதமாக அதிகவேகத்துடனும், எதிர்திசையிலும் மோட்டார் சைக்கிள் செலுத்துவதாக பொதுமக்களினால் பம்பலபிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 5 ஆம் திகதி அதிகாலை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சந்தேகத்தின் பேரில் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலே, குறித்த குழுவினருக்கு எதிராக நீதிமன்றம் 427,500 ரூபா அபராதம் விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய 15 பேரின் சாரதி அனுமதிப்பத்திரத்தினை எதிர்வரும் 6 மாதங்களுக்கு இடைநிறுத்துவதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin