இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள ஸ்டாலின்

இலங்கையுடன் தகுந்த இராஜதந்திர வழிவகைகளை மேற்கொண்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

150 தமிழக கடற்றொழிலாளர்கள்

கடந்த 9 மாதங்களில் இலங்கை படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க இராஜதந்திர வழிகள் மூலம் ஆதரவு அளித்ததற்கு அவர் தமது கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செப்டம்பர் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்படையினரால் 12 இந்திய கடற்றொழிலாளர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் கைது செய்யப்பட்டதை ஸ்டாலின் ஜெய்சங்கரின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

23 தமிழக கடற்றொழிலாளர்கள்

அவர்களில் 5 பேர் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

தற்போதைய நிலவரப்படி 23 கடற்றொழிலாளர்களும் தமிழக கடற்றொழிலாளர்களின் 95 விசைப்படகுகளும் இன்னும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழக கடற்றொழிலாளர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor