2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் அனைவருக்கும் பூரண கண்பார்வை

2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் அனைவருக்கும் பூரண கண்பார்வையை வழங்கும் நிலையான அபிவிருத்தி நோக்கு (SDG) திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில்
வடக்கு மாகாணத்தில் கண் பார்வையில் சிக்கல்களை  எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகிறது.
அதற்கமைய, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைய,  வவுனியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைகள் இலவசமாக முன்னெடுக்கப்படுகிறது. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில், கண்புரை காரணமாக பாதிக்கப்பட்ட 1200 பேருக்கு இந்த இலவச சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது. எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இந்த இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது.
வவுனியா, சிலாபம், முல்லைத்தீவு ஆகிய வைத்தியசாலைகளை சேர்ந்த மூன்று வைத்தியர்களுடன் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ள மூன்று வைத்தியர்களும் இணைந்து இந்த சத்திர சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  மலேசியாவின் அலகா, ஆனந்தா நிதியத்தின் அனுசரணையுடன் இந்த இலவச கண் சத்திரசிகிச்சை முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் மேலும் சில சர்வதேச அமைப்புகளும் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணத்திற்கான முதல்கட்ட சத்திர சிகிச்சை யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைய, இரண்டாம் கட்ட செயற்பாடுகள் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்திய துணை தூதரகம், சுகாதார அமைச்சு ஆகியனவும் இந்த திட்டத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு உதவி நல்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin