இளைஞர் யுவதிகளை குறிவைத்து பல இலட்சம் மோசடி!

சமூக வலைத்தளங்களில் ஆண்களையும் பெண்களையும் ஏமாற்றிய பணம் கொள்ளையடிக்கும் நபர் ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பெரியளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்த கணக்கு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

தனியார் வங்கிக் கணக்கிலிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாக மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் மோசடி விசாரணைப் பிரிவுக்கு அறிவித்துள்ளது.

பணம் பரிமாற்றம்
குறித்த கணக்கு மூலம் குறுகிய காலத்திற்குள் பல லட்சக்கணக்கான ரூபாய் பணம் கைமாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட உரிய பிரிவினர் இந்தக் கணக்கு வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என அடையாளம் கண்டுள்ளனர்.

பின்னர் விசாரணை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கணக்கில் பணத்தை வரவு வைத்த ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அங்கு அவர் TAGGED எனப்படும் ஒன்லைன் கணக்கு மூலம் ஒரு பெண்ணுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டதாகவும், பின்னர் அவரது வேண்டுகோளின் பேரில் பல முறை வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்ததாகவும் கூறினார். எனினும், அவர் தன்னை சந்திக்காததால் அந்த உறவை முறித்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கிக் கணக்கு
அதற்கமைய, குறித்த வங்கிக் கணக்கைப் பயன்படுத்திய நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், TAGGED என்ற கணக்கின் மூலம் பெண் போல் நடித்து ஆண்களிடம் அதிகளவில் பணம் வாங்கியதாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மேலும், குறித்த கணக்கு மூலம் ஆண் போன்று நடித்து பல பெண்களிடம் பணம் பெற்றதாகவும் சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor