பிரான்சில் துப்பாக்கிச்சூடு இருவர் பலி!

பிரான்சிலுள்ள துறைமுக நகரமான மார்சேய் நகரில் கார் ஒன்றின் மீது சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர்.

உணவகம் ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் இருந்த காரில் முன் இருக்கையில் குறித்த ஆணும் பெண்ணும், பின் இருக்கையில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் என ஐந்துபேர் இருந்துள்ளனர்.

சரமாரியான தாக்குதல்

அப்போது, மற்றொரு கார் அந்தக் காரின் அருகே வந்து நின்றுள்ளது. அந்தக் காரிலிருந்தவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், நின்றுகொண்டிருந்த காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஆணும் பெண்ணும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பின் இருக்கையில் இருந்தவர்கள் மீதும் குண்டுகள் பாய்ந்ததில், இருவர் படுகாயமடைந்துள்ளார்கள்.

மேலும் காரில் இருந்த ஆண்கள் ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களெனவும் , அந்தப் பெண்கள் எந்தக் குற்றப்பின்னணியும் இல்லாதவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலை நடத்தியவர்களை பொலிஸார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

Recommended For You

About the Author: webeditor