நாட்டின் பல ஆலயங்களில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது!

இலங்கையில் 21 இந்து ஆலயங்களுக்குள் நுழைந்து கொள்ளையடித்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை அடுத்து சந்தேக நபரிடமிருந்து கொள்ளையடித்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (22-10-2023) நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேநபர், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் குஷிகா குமாரசிறி உத்தரவிட்டுள்ளார்.

நுவரெலியா அம்பேவெல வத்த பொரகாஸ் பகுதியைச் சேர்ந்த 43 வயதான முத்துசாமி ரகுநாதன் என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட தங்கப் பொருட்களை கொள்வனவு செய்த தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு சந்தேக நபருடன் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

பிரதான சந்தேகநபரிடமிருந்து தங்கப் பொருட்களை கொள்வனவு செய்த இருவரையும் தலா இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்கள் இருவரையும் நவம்பர் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

கைதான சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தலவாக்கலை, ராகலை, ஹைஃபோரஸ்ட், லிதுல, ஹட்டன், பொகவந்தலாவ, நானுஓயா, உடப்புஸ்ஸல்லாவ, வெலிமடை, கெப்பட்டிபொல, மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட 21 இந்து ஆலயங்களில் புகுந்தேசந்தேக நபர் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கொள்ளையடித்துள்ளார்

Recommended For You

About the Author: webeditor