ஹர்த்தால் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகளின் அறிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பொது முடிவை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று யாழில் நடைபெற்றது.

 

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.

 

ஹர்த்தால் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலை அரங்கில் இன்று(09-10-2023) பிற்பகல் 3.15 மணியளவில் ஆரம்பமானது.

 

குறித்த கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா , தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் MP , புளொட் தலைவர் த.சித்தார்த்தன் MP , ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா, செயலாளர் எம். கே.சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி ஹர்த்தாலினை அனுஷ்டிப்பது என குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சிகளும் இணைந்து அறிவித்துள்ளன.

Recommended For You

About the Author: S.R.KARAN