நீதிபதி விடயம் முடிந்து விட்டது! ஆனந்தசங்கரி

தேவையற்ற சட்டங்கள் நாட்டுக்குத் தேவையில்லை! சங்கரியை சுட நினைத்தால் சட்டம் உருவாக்கலாம்!! ஆனந்தசங்கரி தெரிவிப்பு.

இலங்கையின் தற்போதைய நிலையில் தேவையற்ற சட்டங்களான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ் நிலைக் காப்புச்சட்டம் என்பன தேவையற்ற ஒரு விடயம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

நாட்டில் தற்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் ஊடக நிகழ்நிலைக் காப்புச் சட்ட மூலம் என்பனவற்றை சட்டங்கள் ஆக்கும் செயற்பாடுகள் முழு வீச்சில் இடம் பெற்று வருகின்றன.

இந்த சட்டமூலங்கள் தற்போது நாடு இருக்கும் நிலையில் தேவையற்றவை.

நாட்டுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுமானால் 24 மணித்தியாலத்துக்குள் பாராளுமன்றத்தை கூட்டி சட்டம் இயற்ற இலங்கை பாராளுமன்றத்தால் முடியும்.

உதாரணமாக கூற வேண்டுமானால் வேறு யாரையும் அல்ல ஆனந்தசங்கரியை சுட்டுக் கொல்வதற்கும் இலங்கையில் சட்டம் இயற்ற முடியும்.

 

தற்போது முல்லைத்தீவு  நீதிபதி அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

நீதிபதி விடயத்தை பெரிதாக்க வேண்டிய தேவை இல்லை. நிறுத்திக் கொள்ளலாம் என்பதே எனது கருத்து.

ஏனெனில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம் பெறுவது இன்று நேற்று இடம்பெறும் விடயம் அல்ல என்பது சட்டத்துறை சார்ந்தவர்களுக்குத் தெரியும்.

2004 ஆம் ஆண்டு சட்ட விரோதமான முறையில் பாராளுமன்றம் சென்ற தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் பாராளுமன்றத்தில் உள்ளார்கள் .

அவர்கள் தாங்களாகவே கள்ள வாக்கு போட்டோம் எனக் கூறியவர்கள். இன்றும் பாராளுமன்றத்தில் உள்ள நிலையில் இலங்கைச் சட்டம் அவர்களை ஒன்றும் செய்யவில்லை.

ஆகவே, இலங்கையில் நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் ஆட்சி அதிகாரம் உள்ளவர்களைப் பாதுகாக்கின்ற நிலையில் மக்களை கட்டுப்படுத்துவதற்கு புதுச் சட்டங்கள் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: S.R.KARAN