சிங்கள இனவாதிகளின் முகத்தில் கரி பூசிய தமிழர்கள்!

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கு மத்தியில் நடைபெற்றன.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நடைபெற்ற பிரதான நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் , நாட்டுப் பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகன் பொதுச்சுடர் ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து தியாக தீபத்தின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் , நினைவிடத்திற்கு அருகிலுள்ள திலீபனின் ஆவணக் காட்சியகத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

அத்துடன் இரண்டு தூக்குக் காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06 ஊர்திப் பவனிகள் வந்திருந்தன.

நினைவுச் சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாக கடும் மழை பொழிய ஆரம்பித்த போதிலும் , மழையையும் பொருட்படுத்தாது , நினைவிடத்தில் கூடி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தியாக தீபம் திலீபன் ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் ஆலய வீதியில் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்தார்.

அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 12 ஆவது நாள் செப்டெம்பர் 26 ஆம் திகதி திலீபன் உயிர் பிரிந்தது.

Recommended For You

About the Author: S.R.KARAN