மண்வெட்டியால் தாக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

லிந்துலையில் ஏற்பட்ட முரண்பாட்டில் மண்வெட்டிப் பிடியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 40 வயதுடைய வீரசாமி பெஞ்சமின் என்பதுடன் இவர் 3 பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை (30) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

இவரது தாயுடன் நேற்றிரவு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சத்தம் கேட்டு விசாரிக்க சென்ற அயல் வீட்டில் உள்ள ஒருவர் மண்வெட்டிப் பிடியால் அவரைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதலை நடத்திய பெரியசாமி விஜயகுமார் என்ற 27 வயதுடைய நபர் தலைமறைவாகியுள்ளாதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor