மே தின பேரணிகள் குறித்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

இன்றைய தினம் (01.05.2023) கொண்டாடப்படவுள்ள மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு, நுகேகொடை, கண்டி, ஹட்டன், பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் விசேட மே தின பேரணிகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், கொழும்பில் மாத்திரம் 3,500க்கும் மேற்பட்ட பொலிஸார், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முழுமையான பாதுகாப்பு
அதேநேரம், ஏனைய பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பேரணிகளுக்கான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

பேரணிகள் நடத்தப்படும் பகுதிகளில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கீழ் குறித்த பணிகள் கண்காணிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை
அத்துடன், வீதியின் ஒரு மருங்கினை மாத்திரம் பயன்படுத்தி பேரணிகளை முன்னெடுக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கத்தினரிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதுள்ளனர்.

மேலும், மக்களை அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில், வாகனங்களைத் தரிப்பது மற்றும் ஏனைய முறையற்ற செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor