நீர்வீழ்ச்சியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நான்கு பிள்ளைகளின் தாய்

நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த நான்கு பிள்ளைகளின் தாயொருவர் இன்று (22) பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது சடலத்தை தேடும் நடவடிக்கையை திம்புல்ல பத்தனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகவத்தை பகுதியைச் சேர்ந்த ஏ. நிஷாந்தனி என்ற 34 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து காணாமல் போயுள்ளார்.

இதன்போது குடும்பத் தகராறு தொடர்பில் முறைப்பாடு செய்ய இரண்டு குழந்தைகளுடன் திம்புல்ல பத்தனை பொலிஸுக்கு வந்திருந்த அவர், மகள் ஒருவருடன் நீர்வீழ்ச்சிக்குச் சென்று, குடிக்க தண்ணீர் போத்தல் கொண்டு வருமாறு சிறுமியிடம் கூறியுள்ளார்.

சிறுமி அந்த இடத்தை விட்டுச் சென்றதையடுத்து நான்கு பிள்ளைகளின் தாயான இவர் டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்துள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தாயுடன் சென்ற சிறுமி மீண்டும் பொலிஸாரிடம் ஓடி வந்து, தாய் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்ததாக கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor