வாழ்க்கையை மாற்றும் வில்வமரம்

சிவபெருமானுக்கு உரியதாக கருதப்படும் வில்வமரத்தில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன.

வில்வ மரத்தை ஆதாரமாக கொண்டு நாம் செய்யும் பரிகாரங்களின் மூலம் நமது வாழ்க்கையே மாறும் அளவிற்கு பல நன்மைகள் ஏற்படும்.

அந்த அளவிற்கு வில்வமரத்திற்கான ஆன்மீக சக்திகள் உள்ளன. ஜாதக தோஷங்களை நீக்குவது முதல் செல்வ செழிப்போடு கூடிய வாழ்வை அமைத்துக்கொள்வது வரை பலவற்றை வில்வ பரிகாரம் மூலம் நாம் பெற முடியும்.

குடியிருக்கும் தெய்வங்கள்

வில்வ மரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளும் இருக்கின்றன.அதாவது லஷ்மி தேவி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என மூவரும் இந்த மரத்தில் குடியிருக்கிறார்கள்.

அதேபோல் மகாவிஷ்ணுவும், பிரம்மதேவரும், சிவபெருமானும் இந்த மரத்தில் இருப்பதாக ஐதீகம். ஆதலால் நாம் வில்வ மரத்தை வழிபட்டு அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கி, சகல செல்வங்களும் பெறலாம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

12 வகையான வில்வ மரங்கள் இருக்கின்றன.அவற்றில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது மகா வில்வம், காசி வில்வம், ஏக வில்வம், பஞ்ச வில்வம் என்பனவாகும்.

தல விருட்சம்

பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் வில்வ மரம் தல விருட்சமாக இருக்கும். வில்வ இலையைக் கொண்டு சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நம்முடைய சகல பாவங்களும் நீங்கும் என்று கூறுவர்.

அப்படிப்பட்ட இந்த வில்வ மரத்தை எந்தெந்த செயல்களுக்காக எவ்வாறு வழிபட வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்ப்போம்.

கோவிலில் இருக்கும் வில்வ மரத்தின் அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி விளக்கேற்றி “ஓம் மஹாலட்சுமியே நமஹ” என்று அந்த வில்வ மரத்தை 11 முறை சுற்றிவர நமக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.

உடலில் உபாதைகள் இருப்பவர்கள் தங்கள் கைகளால் எலுமிச்சம் பழத்தை எடுத்து வந்து வில்வ மரத்தின் அடியில் வைத்து ஒரு அகல் விளக்கில் விளக்கேற்றி அந்த வில்வ மரத்தை 11 முறை வலம் வர உடலில் இருக்கும் உபாதைகள் படிப்படியாக விலகும்.

வில்வ மரத்தை வலம் வருதல்

நமக்கு ஏற்பட்டிருக்கும் திருஷ்டிகள் போகவும், நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படவும் வில்வ மரத்தின் அடியில் ஒரு வாழை இலையை விரித்து அதன் மேல் அகலில் விளக்கேற்றி அந்த விளக்கிற்கு முன்பாக சிறிது குங்குமத்தை வைத்து வில்வ மரத்தை வலம் வந்தால் நம்முடைய திருஷ்டிகள் அனைத்தும் விலகி நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

வில்வ மரத்தின் அடியில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து வெற்றிலை பாக்கு வாழைப்பழம் மற்றும் அதனுடன் தாலிக்கயிறு அதாவது மஞ்சள் கயிறை வைத்து மனதார பிரார்த்தனை செய்து 11 முறை வலம் வர வேண்டும்.

இவ்வாறு 48 நாட்கள் செய்து வர திருமண காரியம் கைகூடும். ஏதேனும் தடங்கல் இருப்பின் அவை விலகும்.

தண்ணீர் ஊற்றி அபிஷேகம்

பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று விரும்புவோர் பிள்ளைகளை கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கு இருக்கும் வில்வ மரத்திற்கு குழந்தைகளின் கைகளினால் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து வந்தால் குழந்தைகளின் படிப்பு நல்ல மாற்றம் ஏற்படும்.

இந்த தண்ணீர் அபிஷேகத்தை வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, பிரதோஷம் அல்லது சஷ்டி போன்ற நாட்களில் மேற்கொள்ள வேண்டும்.

சகல பாவங்களையும் நீக்கி அனைத்து விதமான தெய்வங்களையும் வணங்குவதற்கு சமமாக கருதப்படுவது தான் வில்வ மர வழிபாடு.

நாம் நம் மனதில் ஏதாவது ஒரு வேண்டுதலை நினைத்துக் கொண்டு அந்த வில்வ மரத்தின் அடியில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வில்வ மரத்தை மனதார பிரார்த்தனை செய்து வலம் வந்தோம் என்றால் நம்முடைய வேண்டுதல் சிவபெருமானின் காதுகளுக்கு எட்டி கண்டிப்பான முறையில் அந்த வேண்டுதல் நிறைவேறும்.

Recommended For You

About the Author: webeditor