யாழில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கிக் கொண்டதனால் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த 46 வயதான லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்று (06-03-2023) உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

“கடந்த மாதம் 25ஆம் திகதி அவர் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சி எலும்பு தொண்டைக்குள் சிக்கியுள்ளது. அதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார்.

எலும்பு மார்பு பகுதிவரை இறங்கி சிக்கிக்கொண்டுள்ளது. மறுநாள் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அவரது வாய் ஊடாக கமரா செலுத்தி ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர்.

இருப்பினும், அதற்கு அனுமதிக்காத குடும்பப் பெண் வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை குருதி வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக யாழ் போதனா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

கமரா மூலம் பார்த்தபொழுது ஆட்டிறைச்சி எலும்பு குருதிக் குழாயில் குத்தியதாலேயே குருதி வாந்தி ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது” என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணைகளை யாழ் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் இன்றைய தினம் முன்னெடுத்தார்.

Recommended For You

About the Author: webeditor