கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதி

உலகிலுள்ள மேம்பட்ட விமான நிலையங்களைப் போன்று, கட்டுநாயக்க விமான நிலையத்திலும் இலத்திரனியல் நுழைவாயில் வசதிகளை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விமான நிலைய மற்றும் விமான நிறுவன அதிகாரிகளுக்கு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

முதற்கட்டமாக, வருகை முனையத்தில் இரண்டு வாயில்களையும், புறப்படும் முனையத்தில் இரண்டு வாயில்களையும் நிறுவ அறிவுறுத்தப்பட்டது.

இத்திட்டம் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் இது வரையில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தமை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அதற்கமைய, குறைந்த செலவில் நாட்டுக்கு சாதகமான வகையில் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான கொள்வனவு மற்றும் சட்ட அனுமதிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் மேலும் ஆலோசனை வழங்கினார்.

IOM என்ற அமைப்பு இந்த திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்கும் எனவும் அதற்கு ஒரு வருடம் ஆகும் என்பதும் இங்கு தெரியவந்தது.

அதன்படி, IOM அமைப்பின் நிதியுதவியுடன் இந்தத் திட்டம் முடிக்கப்பட வேண்டும் எனவும் அதுவரை விமான நிறுவனத்தின் நிதியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனுக்கோரல் நடைமுறைகளின் கீழ் இது ஒரு முன்னோடித் திட்டமாக நிறுவப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor