சீனாவில் கொரொனோ தொற்று குறித்து வெளியாகியுள்ள பல அதிர்ச்சி தகவல்கள்!

கோவிட் பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் திணறிவருகிறது சீனா.

சீனா முழுவதுமுள்ள தகனக் கூடங்களுக்கு இறந்த உடல்கள் அதிக அளவில் கொண்டுவரப்படுவதால், கூட்டத்தைச் சமாளிக்க அவற்றின் ஊழியர்கள் சிரமப்படுவதாகக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலர் உயிரிழப்பு
டோங்கிஜாவோ நகரில் சாலையில் இறந்தவர்களைத் தாங்கிச் செல்லும் வாகனங்கள் மற்றும் கார்கள் அணிவகுத்து நின்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து தகனம் செய்யப்பட்ட உடல்கள் காரணமாகச் சூழ்ந்திருந்த புகைக்கு மத்தியிலும் டோங்கிஜாவோ பகுதிக்கு வெளியே சுமார் 30 வாகனங்கள் காத்துக்கிடப்பதாகவும், சில தகன மேடைகளுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருவதாக ப்ளூம்பெர்க் மற்றும் ஸ்கை நியூஸ் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதுமட்டுமல்லாது, பல தகனக் கூடங்களில் உடல்களை வைப்பதற்கான குளிர்பதனக் கிடங்குகள் நிரம்பிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இவை தொடர்பில் உரிய அதிகாரிகள் ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

சீன அரசாங்கம் தனது கடுமையான ‘ஜீரோ-கோவிட்’ நடவடிக்கைகளை நீக்க முடிவு செய்ததை அடுத்து, இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எரிப்பதற்காகக் கொண்டுவரப்படும் உடல்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க முடியாமல், சீனா முழுவதும் உள்ள தகனக் கூடங்கள் திணறி வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பெய்ஜிங்கில் மட்டுமே இந்த இறுதிச் சடங்கு மண்டபங்கள் இப்படிப் பரபரப்பாக இல்லை எனவும், நாட்டின் வடகிழக்கிலிருந்து அதன் தென்மேற்கு வரை பல இடங்களில் இறப்பு எண்ணிக்கையைச் சமாளிக்க தகனம் செய்யும் ஊழியர்கள் போராடி வருவதாகத் தெரிவிக்கிறது ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம்.

பெய்ஜிங்கின் வடகிழக்கில் 700 கி.மீ. தொலைவில் உள்ள ஷென்யாங் நகரில், இறந்தவர்களின் உடல்கள் ஐந்து நாட்கள் வரை புதைக்கப்படாமல் விடப்படுவதாகவும், தகனக் கூடங்கள் இங்கு முற்றிலும் நிரம்பியுள்ளன. இதுபோன்ற ஒரு வருடத்தை நான் பார்த்ததே இல்லை,” என ஓர் இறுதிச் சடங்கு மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தளர்த்தப்பட்ட கோவிட் கட்டுப்பாடு
பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு சில கடினமான கோவிட் வைரஸ் கட்டுப்பாடுகளை டிசம்பரில் சீனா நீக்கியது.

இதனால் மக்கள்தொகை கொண்ட சீனாவில் மீண்டும் கோவிட் வைரஸ் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

2019இன் பிற்பகுதியில் வுஹான் நகரில் கோவிட் வைரஸ் தொற்றுப் பரவல் தொடங்கியதில் இருந்து சீனா 5,242 கோவிட் இறப்புகளையே பதிவு செய்துள்ளது.

இது உலகளாவிய கணக்கின்படி மிகக் குறைவான இறப்பு எண்ணிக்கை ஆகும். ஆனால், கோவிட் பாதிப்புக்குப் பிறகு நிமோனியா அல்லது சுவாசக் கோளாறு ஆகியவற்றால் இறப்பவர்களின் கணக்கு மட்டுமே கோவிட் இறப்புகளாகக் கருதப்படும் எனச் சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“கோவிட் பாதிக்கப்பட்ட பின் மாரடைப்பு அல்லது இதய நோய் ஏற்பட்டு இறப்பு ஏற்பட்டால் அது கோவிட் இறப்பு என்ற வகைப்பாட்டில் வராது” என்று பீக்கிங் பல்கலைக்கழக தலைமை மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு தலைவர் வாங் குய்கியாங் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கோவிட் அலைக்கு மத்தியில் வைரஸின் புதிய கோவிட் வைரஸ் திரிபுகள் உருவாகக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“வைரஸின் பரவும் திறன் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் திறன் ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் அதிகரிக்கும் என்பது ஒப்பீட்டளவில் சாத்தியமில்லை” என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அதிகாரி சூ வென்போ தெரிவித்துள்ளார்.

கட்டாய கோவிட் பரிசோதனை விதிமுறை தளர்த்தப்பட்டதால் சீனாவின் கோவிட் தொற்று எண்ணிக்கையைக் கண்காணிப்பது கடினமாக்கியுள்ளது, எத்தனை பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்பதைக் கணக்கிடுவது இப்போது சாத்தியமற்றது என்று அதிகாரிகள் கடந்த வாரம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

2023-ல் பத்து லட்சம் இறப்புகள் எனக் கணிப்பு
இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் ஏவல்யூவேஷன் (IHME) எனும் நிறுவனத்தின் புதிய கணிப்பின்படி, கோவிட் கட்டுப்பாடுகள் திடீரென நீக்கப்படுவதால் 2023ஆம் ஆண்டு அதிக பரவல் ஏற்பட்டு உலகளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor