கனடாவில் இலங்கையை சேர்ந்த இளைஞர் மீது 18 வழக்குகள் பதிவு!

கனடாவில் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர் மீது மேலதிகமாக 18 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையை சேர்ந்த 21 வயதுடைய இமேஷ் ரத்நாயக்க என்பவர் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.

இவர் மீது துஷ்பிரயோகம், பாலியல் குறுக்கீடு மற்றும் சிறார் ஆபாச படத்தை உருவாக்குதல் மற்றும் வெளியிடுதல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், குறித்த இளைஞரினால் நூறுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அல்பர்ட்டா விசாரணை அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் விடுத்துள்ள கோரிக்கை
மேலும், 11 முதல் 13 வயதுடைய சிறார்களை இவர் குறிவைத்துள்ளமையும் விசாரணையில் வெளிவந்துள்ளது.

இமேஷ் ரத்நாயக்க சமூக ஊடகங்களில் பல பெயர்களில் உலவியுள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில், islandsauce0129, monked.ruffy, Matt Wintoni உட்பட குறிப்பிட்ட புனைப்பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

மேலும், எட்மண்டன் பிராந்தியத்தில் உள்ள பெற்றோர்கள் குறித்த நபர் தொடர்பில் தமது குழந்தைகளுடன் கலந்துரையாடுமாறும், அவர்கள் ரத்நாயக்காவை எப்போதேனும் தொடர்புகொண்டார்களா அல்லது சந்தித்தார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நபரினால் பாதிக்கப்பட்டிருப்பின் சிறார்கள் முன்வந்து விசாரணைக்கு உதவ வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor