இந்தியாவுக்கான கடல் வழிச் சுற்றுப் பயணத்தை அறிந்த வாசுக்கோடகாமா காலத்தில் சீசெல்சுத் தீவு தமிழரின் தீவே என இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
சங்க காலப் பாண்டியர் சோழர் சேரர் தங்களுடைய கடல்வழிப் பயணங்களுக்கு மரக்கலங்களை இணக்க மரங்களுக்காக சீசெல்சுத் தீவுக்கு வந்து போயினர்.
மூன்று நீர் கலக்கும் முந்நீர்த் தீவுகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சோழர் வசம் இருந்தன, அவற்றுள் ஒன்று சீசெல்சுத் தீவு.
முனிவர் யோகியர் சித்தர் யாவரினதும் திருவோடு முந்நீர்த் தீவில் காய்க்கும் பனையின் காய் – பழம்.
சேரர் கடலில் மிதந்து சேரநாட்டு ஈழநாட்டுக் கடற்கரைகளில் சேரும் ஓடுகளே முனிவர் யோகியர் சித்தர் வைத்திருக்கும் திருவோடுகள்.
சீசெல்சு என்ற பிரெஞ்சுப் பெயர் வர முன்பேயே, முந்நீர்த் தீவுக்கு வாருங்கள், கப்பல் கட்டும் மரங்களை வெட்டலாம் எனப் பிரெஞ்சுக்காரரை அழைத்து வந்தோர் புதுச்சேரிச் தமிழர்.
220 ஆண்டுகளுக்குமுன் பிரஞ்சுக்காரர் இத்தீவுக்கு 45 பேரை அழைத்து வந்தனர். அவர்களுள் ஐவர் தமிழர். நெப்போலியனின் படைத்தளபதியின் பெயரான சீசெல்சு எனப் பெயரிட்டனர்.
இராமநாதபுரத்தை இலாலாபாத்து என மதுரை சுல்தான்கள் பெயரிட்டது போல்
பிரயாகைக்கு தில்லி சுல்தான்கள் அலகபாத்து எனப் பெயரிட்டது போல்
முந்நீர்த் தீவுக்குச் சீசெலல்சுப் பெயரைச் சூட்டினர் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்.
இத்தீவின் ஆதிச் சொந்தக்காரர் மட்டுமன்று, இக்காலக் குடியேற்ற உரிமையாளரும் தமிழரே.
இன்று 100,000 மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் 10,000 தமிழர் வாழ்கின்றனர். 10% தமிழைப் பேசுகின்ற தமிழராக வாழ்கின்ற தமிழர்.
எனினும் இத்தீவில் 45% மக்களுள் தமிழரின் மரபணுக்கள் புதைந்துள்ளன. தனியே வந்த தமிழரான ஆண்கள் இங்குள்ள தமிழரல்லாத பெண்களைத் திருமணம் செய்தும் செய்யாமலும் பெற்றெடுத்த எச்சமே இந்த 45%.
இந்த 45% மக்களின் பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயர்களாகவே இருக்கும்.
படையாட்சி காவல்துறைத் தலைவராக இருந்தவர். அவருக்கு தமிழ் தெரியாது. தமிழ் முன்னோர்களையும் தெரியாது.
பிள்ளை கல்வி துறை இயக்குனராக இருந்தவர். அவருக்கு தமிழ் தெரியாது. தமிழ் முன்னோரையும் தெரியாது.
மாண்புமிகு தேவிகா
மாண்புமிகு அரங்கசாமி
என இருவர்.
தமிழ் தெரியாத, தமிழ் முன்னோர்களை ஓரளவு தெரிந்து வைத்திருக்கின்ற, இன்றைய சீசெல்சு அரசின் அமைச்சர்கள்.
தமிழ் நன்றாகத் தெரிந்த சத்தியா நாயுடு, சீசெல்சுச் சட்டசபைக்குத் தேர்தலில் வெற்றி ஈட்டிய இன்றைய உறுப்பினர்.
உலகெங்கும் பரந்து வாழும் தமிழருக்கு இந்தச் செய்திகள் அரைகுறையாகவே தெரியும். சீசெல்சு நாடு இருப்பதே பலருக்கு தெரிவதில்லை.
அரசின் ஆட்சியில் இருக்கின்ற சீசெல்சுத் தமிழர் மூவரையும் சந்தித்தோம். பாராட்டினோம். வாழ்த்தினோம். தமிழகத்துக்கு வருக, இலங்கைக்கு வருக, என அழைத்தோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.