உலகப் பொருளாதார வரலாற்றில் புதிய அத்தியாயம் – உலகின் முதல் ‘டிரில்லியனர்’ ஆனார் எலான் மாஸ்க்
உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) அமெரிக்க பங்குச்சந்தையில் கால்பதித்ததை அடுத்து, அதன் நிறுவனர் எலான் மஸ்க் உலகின் முதல் ‘டிரில்லியனர்’ (ஒரு லட்சம் கோடி டாலர் அதிபர்) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
நாஸ்டாக் (Nasdaq) பங்குச்சந்தையில் ‘SPCX’ என்ற குறியீட்டுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகாரப்பூர்வமாக வர்த்தகத்திற்கு வந்த சில நிமிடங்களிலேயே இந்த மைல்கல் எட்டப்பட்டது.
வியாழக்கிழமை இரவு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கீடு (IPO) விலை ஒரு பங்கிற்கு $135 என நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் வால் ஸ்ட்ரீட் வரலாற்றிலேயே மிகப்பெரிய IPO-வாக உருவெடுத்து, சுமார் $75 பில்லியன் நிதியை அந்நிறுவனம் திரட்டியது.
இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் தொடங்கியவுடன், முதலீட்டாளர்களின் அதீத வரவேற்பால் பங்கின் மதிப்பு 11% உயர்ந்து $150 ஆக எகிறியது. இதனால் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு $2 டிரில்லியனைத் தொட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் (Forbes) மற்றும் ராய்ட்டர்ஸ் (Reuters) அமைப்புகளின் கணக்கீட்டின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் மஸ்க்கிற்கு இருக்கும் சுமார் 42% பங்குகளின் மதிப்பு மட்டும் $866 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தனக்கு அடுத்தபடியாக இருக்கும் கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ் ($304 பில்லியன்), ஜெஃப் பெசோஸ் ($262 பில்லியன்) உள்ளிட்ட அடுத்த 4 பெரும் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களை விட மஸ்க் அதிக சொத்துக்களைக் கொண்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த $1.1 டிரில்லியன் தனிநபர் சொத்து மதிப்பு என்பது, மனித வரலாற்றில் எந்தவொரு தனிமனிதனும் எட்டாத ஒரு உச்சமாகும்.
மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு, தைவான், அயர்லாந்து அல்லது ஸ்வீடன் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த ஆண்டு பொருளாதாரத்தை (GDP) விட அதிகம். மேலும், அவர் பிறந்த நாடான தென்னாப்பிரிக்காவின் ஜிடிபி-யை ($480 பில்லியன்) விட இரு மடங்கு அதிகம்.
1937-ல் புகழ்பெற்ற தொழிலதிபர் ஜான் டி. ராக்பெல்லரின் சொத்து அமெரிக்க ஜிடிபி-யில் 1.5% ஆக இருந்தது. ஆனால் இன்று மஸ்க்கின் சொத்து அமெரிக்க ஜிடிபி-யில் 3% க்கும் மேல்ஆகும்.
மஸ்க்கின் இந்த அசாத்திய விண்வெளி மற்றும் ஏஐ (AI) கனவுகளுக்கு முதலீட்டாளர்கள் வாரி வழங்கிய பணமே அவரை இந்த இடத்திற்கு உயர்த்தியுள்ளது. எனினும், இந்த சாதனை உலகளாவிய பொருளாதார சமமின்மை (Wealth Inequality) குறித்த கடுமையான விவாதங்களை மீண்டும் கிளப்பியுள்ளது.
உலக மக்கள் தொகையில் கீழ்மட்டத்தில் இருக்கும் 46% மக்களின் (சுமார் 3.8 பில்லியன் மக்கள்) ஒட்டுமொத்த சொத்து மதிப்பை விட எலான் மஸ்க்கின் தனிநபர் சொத்து அதிகம் என்று ஆக்ஸ்பாம் (Oxfam) போன்ற அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
இருப்பினும், ஒரு சாதாரண முதலீட்டாளராகத் தொடங்கி, விண்வெளி மற்றும் மின்சார வாகனத் துறையில் புரட்சி செய்து, இன்று வரலாற்றின் முதல் டிரில்லியனராக எலான் மஸ்க் சிம்மாசனம் ஏறியிருப்பது உலக வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

