காசிம் சுலைமானியின் மருமகள் மற்றும் பேத்தி அமெரிக்காவில் கைது: வசிப்பிட உரிமையை ரத்து செய்தார் மார்கோ ரூபியோ!
ஈரானின் மறைந்த இராணுவத் தளபதி Qasem Soleimani நெருங்கிய உறவினர்கள் இருவர் அமெரிக்கக் கூட்டாட்சி முகவர்களால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காசிம் சுலைமானியின் மருமகள் ஹமீதா சுலைமானி அஃப்சர் மற்றும் அவரது மகள் சுலைமானியின் பேத்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு இவர்களைக் கைது செய்த அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர், தற்போது குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவின் (ICE) காவலில் வைத்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ இவர்களது சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிடத் தகுதியை (Green Card) உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குபவர்கள் மற்றும் ஈரானியப் பிரச்சாரங்களை அமெரிக்க மண்ணில் முன்னெடுப்பவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்துக் கொண்டே ஈரானிய அரசாங்கத்திற்கு ஆதரவான கருத்துகளைப் பரப்பியதாகவும், அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் உளவுத்துறை ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இருவரும் விரைவில் அமெரிக்காவிலிருந்து ஈரானுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலில், ஈரானுடன் தொடர்புடைய நபர்கள் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் மிகக்கடுமையான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

