கடலுக்கடியில் ஈரானின் பிரம்மாண்ட ஏவுகனை நகரம்.. ஹார்முஸ் ஜலசந்தியில் தற்கொலைப்படை டிரோன் படகுகள்
ஈரானின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. உலகின் 20 சதவீத எண்ணெய் இந்த வழியாக கப்பல்களில் கடந்து செல்கிறது.
இதனை தற்போது போர் காரணமாக ஈரான் முடக்கிவைத்துள்ளது. இந்த வழியாகக் கப்பல்கள் செல்வதைத் தடுப்பதற்காக, தற்கொலைப்படை டிரோன் படகுகளை அதிகளவில் கையிருப்பில் வைத்துள்ளதாக ஈரான் ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி, “ஏவுகணை நகரம்” என்று வர்ணிக்கப்படும் நிலத்தடி வளாகத்திற்குள் எடுக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது.
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்வதை தடுக்க பல்வேறு யுக்திகைளை கையாண்டுள்ளது. அதில் ஒன்று தான் பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம். ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்வதைத் தடுப்பதற்காக, தற்கொலைப்படை டிரோன் படகுகளை அதிகளவில் கையிருப்பில் வைத்துள்ளது. ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில், நீண்ட சுரங்கப்பாதைகள் முழுவதும் கடற்படை டிரோன்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கடல் கண்ணிவெடிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சில ஆயுதங்கள் ஏவப்படும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இந்த வீடியோக்கள் எப்போது எடுக்கப்பட்டன என்பதும், இந்த இடங்கள் அமெரிக்க அல்லது இஸ்ரேலிய படைகளால் தற்போது தாக்கப்பட்டதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
ஒரு புகைப்படத்தில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உருவப்படத்திற்கு கீழே, டிரெய்லரில் ஏற்றப்பட்ட கடற்படை டிரோன் ஒன்று சுரங்கப்பாதையில் இருப்பதைக் காண முடிகிறது.
டிரோன் படகுகளின் தாக்குதல்
ஆளே இல்லாமல் இயக்கப்படும் இந்த வகை சிறிய படகுகளை ஆங்கிலத்தில் USVs – Unmanned Surface Vehicles என்று அழைக்கப்படும். இந்த கப்பல்கள் தான் பாரசீக வளைகுடாவில் ஏற்கனவே இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்களைத் தாக்கியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியின் குறுகிய பகுதி வழியாகச் செல்ல முயன்றபோது இத்தாக்குதல் நடந்திருக்கிறது.. நீரின் மேற்பரப்பிலோ அல்லது சற்று அடியிலோ பயணிக்கும் இந்தச் சிறிய படகுகள், வெடிபொருட்களைச் சுமந்து சென்று இலக்கின் மீது மோதி வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மார்ச் 1ம் தேதி நடந்த சம்பவம்
ஓமன் கடற்கரையிலிருந்து 44 கடல் மைல் தொலைவில், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் சென்ற ‘MKD VYOM’ என்ற கச்சா எண்ணெய் டேங்கர் தாக்கப்பட்டது. ஒரு டிரோன் படகு கப்பலின் எஞ்சின் அறையைத் தாக்கி வெடிப்பு மற்றும் தீ விபத்தை ஏற்படுத்தியதில் ஒரு ஊழியர் உயிரிழந்ததாகப் பிரிட்டனின் கடல்சார் வர்த்தக அமைப்பு தெரிவித்தது.
சில நாட்களுக்குப் பிறகு
ஈராக்கின் கோர் அல் ஜுபைர் துறைமுகம் அருகே நின்றிருந்த பஹாமாஸ் நாட்டு கொடியுடன் கூடிய ‘Sonangol Namibe’ என்ற டேங்கர் கப்பல் தாக்கப்பட்டது. இதில் இருந்த 23 ஊழியர்களும் காயமின்றி தப்பினர். இதனிடையே இண்டர்நெட்டில் பரவிய வீடியோ ஒன்றில், அதிவேகப் படகு போன்ற ஒரு பொருள் டேங்கர் கப்பலை நோக்கிச் சென்று அதன் பக்கவாட்டில் மோதி பெரும் வெடிப்பை ஏற்படுத்துவதும், கரும்புகை வெளியேறுவதும் பதிவாகி இருந்தது
உலகளாவிய தாக்கம்
உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய அதே உத்தியை தற்போது ஈரானும் கையாண்டு வருகிறது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. தற்போதுள்ள போர் சூழலில், இந்த வழியாக எண்ணெய் கொண்டு செல்வதை நிறுத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. புதன்கிழமை அன்று வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 200 டாலரை எட்டும் என்பதால் உலகம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

