இணையம் ஊடாக பாரிய நிதி மோசடி; சீனப் பிரஜைகள் 16 பேர் இலங்கையில் சிக்கினர்!

இணையம் ஊடாக பாரிய நிதி மோசடி; சீனப் பிரஜைகள் 16 பேர் இலங்கையில் சிக்கினர்!

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணையதளம் ஊடாகப் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த சீனப் பிரஜைகள் 16 பேர் கொழும்பு 07, குருந்துவத்தை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு 05, ஜாவத்தை வீதி மற்றும் டொன் கரொலிஸ் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்கியிருந்த சீனர்கள் குழுவொன்று, சந்தேகத்துக்கிடமான முறையில் செயற்படுவதாகக் குருந்துவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய, குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன்
இணைந்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் அனைவரும் பிடிபட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட அதிநவீன இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோதப் பொருள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

23 மடிக்கணினிகள், 11 கைத்தொலைபேசிகள், 7 ரௌட்டர்கள், 9 குரல் மொழிபெயர்ப்பு இயந்திரங்கள்,
வரி செலுத்தப்படாத 3 ஆயிரத்து 280 வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பவையே சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 16 சீன ஆண்களும் இலங்கையிலிருந்து கொண்டு, வெளிநாடுகளில் உள்ள நபர்களைத் தொடர்பு கொண்டு ‘பிரிமிட்’ பாணியிலான நிதி மோசடிகளில் ஈடுபட்டுவந்தமை முதற்கட்ட விசாரணைகளில்உறுதியாகியுள்ளது.

அத்துடன், இவர்கள் சுற்றுலா விசா நிபந்தனைகளை
மீறி நீண்டகாலமாகத் தங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்களது விசா விவரங்கள் தொடர்பாகக் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் இணைந்து மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin