3900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) இலங்கையை வந்தடைந்தது.!
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இதைப் பயன்படுத்தி 300,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3900 மற்றும் 3700 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் முறையே எதிர்வரும் 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன.
எவ்வாறாயினும், இன்றைய தினமும் (22) நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், சில இடங்களில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
தற்போதைய நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், போதுமான கையிருப்பை பேணுவதற்காக புதிய கட்டளைகள் (orders) வழங்கப்பட்டுள்ளதாகவும், பெப்ரவரி மாத இறுதிக்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் அதிகளவிலான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், எரிவாயு விநியோகிக்கப்படும் சரியான திகதி குறித்து லிட்ரோ நிறுவனம் தமக்கு இதுவரை அறிவிக்கவில்லை என வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

