சிலாபத்தில் பாரிய கடத்தல் முறியடிப்பு
சிலாபம், தொடுவாவ பகுதியில் சுமார் 20 மில்லியன் ரூபா (2 கோடி) பெறுமதியான கடத்தல் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
கடற்படையினருடன் இணைந்து நேற்றைய தினம் (பிப்ரவரி 21, 2026) முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
25 உறைகளில் அடைக்கப்பட்ட 992 கிலோ 800 கிராம் பீடி இலைகள் , 1,40,000 எண்ணிக்கையிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத இரசாயனப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடல் மார்க்கமாக இந்த பொருட்கள் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னணி மற்றும் இதன் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்து மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

