அக்குரேகொட இரட்டைப் படுகொலை: முக்கிய சந்தேகநபர் ‘டிலா’விடம் 90 நாட்கள் தீவிர விசாரணை!
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘பொல்கஸ்ஸோவிட்ட டிலா’ என்பவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவற்துறையினருக்கு அனுமதி கிடைத்துள்ளது.
📌 28 வயதுடைய ‘பொல்கஸ்ஸோவிட்ட டிலா’ கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று (20) இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளனர்.
கொலையாளிகளுக்கு துப்பாக்கிகளை விநியோகிப்பதற்கும், அவற்றை கொண்டு செல்வதற்கும் இவர் முக்கிய மூளையாக செயற்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.
🔍 கடந்த 16ஆம் திகதி கொட்டாவ பகுதியில் வைத்து, துப்பாக்கிகளைக் கொண்டு செல்ல உதவிய சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைதான அந்த சகோதரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதும், அவர்களுடன் இணைந்து இந்த கடத்தலை ஒருங்கிணைத்ததும் இந்த ‘டிலா’ என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காவற்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில் 12 காவற்தறைக் குழுக்கள் இந்த பாரிய படுகொலைச் சம்பவம் குறித்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக உண்மைகளைக் கண்டறிய இந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் விசாரணை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

