இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு: வெளிநாடுகளில் தலைமறைவாக 103 குற்றவாளிகளுக்கு வலைவீச்சு
வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் 103 குற்றவாளிகளை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்காக, இன்டர்போல் (Interpol) மூலம் சிவப்பு அறிவிப்புகள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் (ASP F.U. Wootler) இன்று (பெப்ரவரி 9, 2026) தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டு இலங்கையில் பாதாள உலகக் குழுக்களை இயக்குபவர்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்களைக் இலக்கு வைத்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 103 சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த விசேட சர்வதேச பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், தேடப்பட்டு வந்தவர்களில் மூன்று பேர் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களுக்குச் சொந்தமான சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் (காணிகள், வாகனங்கள் மற்றும் பணம்) காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .
துபாயில் இருந்து கொண்டு திட்டமிட்ட குற்றங்களை வழிநடத்தும் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறிய சர்வதேச காவல்துறை யினருடன் (Interpol) இணைந்து இலங்கை காவல்துறையினா் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகின்றனர். தப்பிச் சென்றவர்களின் எஞ்சிய சொத்துக்களையும் சட்ட ரீதியாக அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தொிவித்தாா். .
103 பேரில் 30-க்கும் மேற்பட்ட முக்கிய குற்றவாளிகள் துபாயில் இருந்தே தங்களது பாதாள உலகக் குழுக்களை வழிநடத்துகின்றனர்.
நிதி மோசடி மற்றும் சில பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் பிரான்ஸில் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எஞ்சியவர்கள் இந்தியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் போலி அடையாளங்களுடன் வசித்து வருகின்றனர் என தொிவிக்கப்படுகின்றது
இந்த ஆண்டின் தொடக்கத்தில் துபாயிலிருந்து 3 முக்கிய குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் கந்தானை (Kandana) நபர் (30 வயது) 2025 ஜூலை மாதம் வாகனத்திற்குள் வைத்து ஒருவரைச் சுட்டுக் கொலை செய்த வழக்கின் முக்கிய குற்றவாளி.
எல்பிட்டிய (Elpitiya) நபர் (52 வயது) தென் மாகாணத்தில் ‘ஒப்பந்தக் கொலைகள்’ (Contract Killings) மற்றும் ஆயுதக் கடத்தல்களில் ஈடுபட்ட பாதாள உலகத் தலைவன்.
கல்கிஸ்சை (Mount Lavinia) பெண் (56 வயது) வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் பணிபுரிந்தபோது அரசாங்க நிதியை மோசடி செய்த குற்றத்திற்காகத் தேடப்பட்டவர்.
இன்டர்போல் கண்காணிப்பில் உள்ள மற்றவர்களின் பெயா்களை இலங்கை காவல்துறையினா் பகிரங்கப்படுத்தாவிட்டாலும், பிரமிட் திட்டங்கள் மற்றும் வங்கி மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியவர்கள், இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் திட்டமிடுபவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இணைய பண மோசடிகளில் ஈடுபடுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

