கனரக கனிய அகழ்வு உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம்..!

கனரக கனிய அகழ்வு உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம்..!

புதிய தேசிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் வரை கனரக அளவிலான கனிம அகழ்வு உரிமங்களை (Mining Licenses) வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சில் நேற்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

புதிய தேசிய கனிமக் கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றிச் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரை கட்டுமானத் துறைக்குத் தேவையான மூலப்பொருட்களைத் தவிர, ஏனைய அனைத்து கனிம அகழ்வு உரிமங்களையும் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வீடமைப்பு மற்றும் கட்டுமானத் துறைக்கு அத்தியாவசியமான மணல் மற்றும் கற்கள் போன்ற பொருட்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.

இல்மனைட், ரூடைல், சிர்கோன் மற்றும் கார்னட் போன்ற கனிய மணல்களுக்கான அனைத்து ஆய்வு மற்றும் அகழ்வு உரிமங்களை வழங்குவது புதிய கொள்கை வெளியாகும் வரை நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் முடிவடைவதற்கு முன்னர் இது தொடர்பான வழிகாட்டல்கள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப தீர்மானங்கள் எடுப்பதைத் தவிர்ப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் முழுமையான உரிமச் செயல்முறை டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது.

மிரிஜ்ஜவில பகுதியில் கனிம மணலை அகற்றுவதற்குத் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு தனியார் நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

2024 செப்டம்பரில் போக்குவரத்து தொடர்பான கடிதமொன்றே வழங்கப்பட்டுள்ளதாகவும், அது ஆய்வுக்கோ அல்லது அகழ்வுக்கோ வழங்கப்பட்ட செல்லுபடியாகும் உரிமம் அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார். இதன் மூலம் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை அவர் மறுத்தார்.

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத அகழ்வுகளால் நாட்டிற்குப் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரச நிலுவைத் தொகையை செலுத்தாமை மற்றும் சட்டவிரோத அகழ்வுகள் தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறான மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் அனுமதியுடன் “உடனடி சுற்றிவளைப்பு பிரிவொன்று” நிறுவப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin