காரைதீவு கண்ணகி அம்மனுக்கு தைப்பூசத்தில் நெற்புதிர் அறுவடை!
தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்.
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
அதன்படி 01.02.2026 அன்று அனைத்து முருகன் தலங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும்.
தைப்பூச நன்னாளிலே இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் புதிர் எடுப்பது வழக்கமாகும்.
இதற்கிணங்க இன்று காலை காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் தர்மகத்தாக்கள், கப்புகனார், ஆலய நிர்வாகிகள் உட்பட பலரும் கண்ணகை அம்மனுக்கு சொந்தமான வயலிற்கு சென்று புதிர் எடுத்து பாரம்பரிய முறையோடு ஊர்வலமாக வந்து மாவடி கந்தன் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடு சம்பிரதாய முறைப்படி இடம்பெறும் அதில் கலந்து கொண்டு அம்மன் ஆலயத்திற்கு புதிர்களை எடுத்து சென்றனர். அதன் பின் அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர்.
ஊரில் உள்ளவர்களும் ஆலயம் சென்று புதிர்களை எடுத்து சென்றதுடன் பொங்கல் வழிபாட்டுடன் கூடிய பூஜை நிகழ்விலும் கலந்து கொண்டனர்.
அத்தோடு காலா காலத்தில் பெய்யாத மழையும் பூசா பூசத்தில் பெய்யும் என்ற ஆன்றோர் வாக்கும் ஒருபோதும் பொய்யானது இல்லை.
இன்றும் மழை பொழிந்து கொண்டே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


