சாய்ந்தமருதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு..!
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதியில், பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (09) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (08) இரவு படுக்கைக்குச் செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு அறைக்குச் சென்ற குறித்த மாணவன், இன்று காலை உயிரற்ற நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவன் கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தம் தொடர்பாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், மேலும் கடந்த மூன்று மாதங்களாக பாடசாலைக்கு செல்வதை இடைநிறுத்தியிருந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் அம்பாறை மாவட்ட தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொண்டதுடன், கல்முனை நீதிமன்ற நீதிவான் கட்டளைக்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்தை பார்வையிட்டு மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

