வாக்குறுதியை மீறுகிறதா அரசு?

வாக்குறுதியை மீறுகிறதா அரசு? புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு 61 செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதைவிட மோசமான ‘அரச பாதுகாப்புச் சட்டத்தை’ கொண்டுவர முயற்சிப்பதாக கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் 61 பேர் இணைந்து கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பியுள்ள விசேட மகஜர் ஒன்றிலேயே அவர்கள் இந்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

அடக்குமுறைக்கு புதிய வடிவம் தற்போது நடைமுறையிலுள்ள 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்ட வரைவு நீதியமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கோரியுள்ளார்.

இது குறித்து செயற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள முக்கிய விடயங்கள்:

தேர்தல் வாக்குறுதி மீறல்: அடக்குமுறைச் சட்டங்களை நீக்கி மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவோம் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு இந்த நடவடிக்கை முற்றிலும் முரணானது.

கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்: புதிய சட்ட வரைவு மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கக்கூடிய அபாயகரமான பிரிவுகளைக் கொண்டுள்ளது.

அறநெறிசார் தார்மீகம் இல்லை: முன்னைய ஆட்சியாளர்களால் இதேபோன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்துப் போராடிய ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி, இன்று அதேபோன்றதொரு சட்டத்தைக் கொண்டுவருவது அவர்களின் அரசியல் தார்மீகத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

யார் இந்த எதிர்ப்பாளர்கள்? அருட்தந்தை மா.சத்திவேல், அருட்தந்தை டெரன்ஸ் பர்ணாந்து, அருட்சகோதரி தீபா பர்ணாந்து மற்றும் ருக்கி பர்ணாந்து உள்ளிட்ட 61 மதகுருமார்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் இந்த மகஜரில் கையொப்பமிட்டுள்ளனர்.

நெருக்கடி காலத்தில் அவசரம் ஏன்? நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில், பொதுமக்களின் முறையான பங்களிப்பு இன்றி இவ்வளவு பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சட்டத்தை அவசரமாக நிறைவேற்ற முயல்வது ஜனநாயக விரோதமானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த காலங்களில் சிறுபான்மையினர், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட அடக்குமுறை ஆயுதமான இந்தச் சட்டத்தை, முழுமையாக நிராகரிப்பதாக அவர்கள் அந்த மகஜரில் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin