கோர விபத்துக்களில் சிறுவன் உட்பட ஐவர் பலி..!

கோர விபத்துக்களில் சிறுவன் உட்பட ஐவர் பலி..!

கொழும்பு – அவிசாவளை வீதியின் வெல்லம்பிட்டிய பகுதியில், கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி நேற்று (26) அதிகாலை விபத்துக்குள்ளானது.

முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் பயணித்த 14 வயது சிறுவன் பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கடுவலை, கொத்தலாவல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று மாலை லுணுவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்மோதர – போலவத்த வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த செலுத்துனரான 18 வயது இளைஞன் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இவர் மஹவெவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மித்தேனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாவ, தெபொக்காவ பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த வாய்க்காலுக்குள் வீழ்ந்ததில் அதனை செலுத்திச் சென்ற 31 வயதான நபர் உயிரிழந்தார்.

மேலும், வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெந்தல – எலகந்த வீதியில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து கடையொன்றுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 21 மற்றும் 25 வயதான இரு இளைஞர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்தனர்.

இவர்கள் இருவரும் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கண்ட விபத்துக்கள் தொடர்பில் அந்தந்தப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Recommended For You

About the Author: admin