2026 IPL : மதீஷ பத்திரனவை விடுவித்தது CSK..!
2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.
அதன்படி, அண்மைக்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக மாறியிருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவை, வரவிருக்கும் தொடருக்காக அணியின் நிர்வாகம் விடுவிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு இவரை இந்திய ரூபா 13 கோடிக்கு சென்னை அணி தக்கவைத்திருந்தது.
2023 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தனது முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற மதீஷ பத்திரன, தான் விளையாடிய முதல் தொடரிலேயே வெற்றி பெற்ற அணியில் ஒரு அங்கமானார்.
அந்தத் தொடரில் அவர் தனது அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை அவர் 32 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மதீஷ பத்திரன மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அப்போதைய தலைவர் மகேந்திர சிங் தோனி கூட, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் மதீஷ பத்திரன கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவ்வாறு செய்தால், அவரால் நீண்டகால தொழில்முறை பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், சென்னை அணிக்கு மதீஷ பத்திரன தேவைப்பட்டால், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ள வீரர்களின் ஏலத்தில் அவரை மீண்டும் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது.
ஏலத் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படவுள்ள வீரர்களின் பட்டியலை இந்திய நேரப்படி இன்று மாலை 3.00 மணிக்கு முன் வெளியிட வேண்டியிருந்தது.
அதன்படி, மதீஷ பத்திரனவைத் தவிர, நியூசிலாந்து வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா உட்பட பல வீரர்களை விடுவிக்கவும் சென்னை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

