காணாமல்போனோர் விவகாரம்: 10,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் மீண்டும் விசாரணை – நீதி அமைச்சர்
2000ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கில் பதிவான 10,000 இற்கும் மேற்பட்ட காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகள் மீண்டும் விசாரிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பவற்றுக்கு புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த விசாரணைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதுடன், இதற்காக 375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு இன்று (29) அலரி மாளிகையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், காணாமல்போகச் செய்தல் என்பது ஒரு குற்றம் என வலியுறுத்தினார். அத்துடன், புதிய அரசாங்கத்தின் கொள்கையின் மையமாக உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகள் இருக்கும் எனவும் அவர் கூறினார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப்படும் என்றும், நியாயமான நீதியை உறுதி செய்வதற்கான புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும், காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்காக விரிவான இழப்பீட்டு முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

