சட்ட மா அதிபர் மீது அரசியல் அழுத்தம் பிரயோகிக்கக் கூடாது : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவையோ அரசியல் தலைமைகளோ தலையீடு செய்யக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் சட்டத்தின் சுயாதீனத்தன்மை சவாலுக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கின் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்வது குறித்த சட்ட மா அதிபரின் பரிந்துரையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களம் விசாரணைகளின் அடிப்படையில் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியுமா இல்லையா என்பதனை நிர்ணயம் செய்வதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது முழுக்க முழுக்க சட்டத்தின் அடிப்படையிலானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகள் குறித்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் எனவும் இந்த விவகாரத்தில் அமைச்சரவையோ அரசியல் தலைமைகளோ தலையீடு செய்வது சட்டத்தின் நியாயதிக்கத்தை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் பிரபல்யமான பொது நிலைப்பாடுகளின் அடிப்படையில் அன்றி சட்டத்தின் பிரகாரம் முன்வைக்கப்படுவதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin