வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள இலங்கையின் பாதாள உலகக்குழுவினரை சேர்ந்த 13 பேரை நாடு கடத்த திட்டம்!

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள தேடப்படும் பாதாள உலகக்குழுவினர் 13 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் துபாயில் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்து விசாரணைக்கு உட்படுத்த தேவையான சட்டங்கள் பயன்படுத்தப்படும் எனவும் பொது பாதுகாப்பு செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஹரக் கட்டா, கணேமுல்லே சஞ்சீவ, குடு தர்மே போன்ற பிரபல பாதாள உலகக்கும்பல்களின் தலைவர்களும் அவர்களது கூட்டாளிகளும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை நாட்டிற்கு அழைத்துவர தேவையான ஒப்படைப்பு ஆவணங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு
சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் பலமானவரும், பாதாள உலகக்கும்பலின் முக்கிய தலைவருமான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக, துபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையை சர்வதேச பொலிஸார் அண்மையில் இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.

அவர் நாட்டை விட்டு துபாய்க்கு தப்பிச் சென்ற போது பயன்படுத்திய போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் 30 நாட்களுக்குள் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்திருந்தது.

போதைப்பொருள் கடத்தல்
துபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பிரதான பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான ஹரக் கட்டாவின் வலிக்காட்டலில் நாடு முழுவதும் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், ‘ஹரக் கட்டா’ துபாயில் இருந்து இலங்கைக்கு பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின் போதைப்பொருளை பல்வேறு முறைகளில் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor